போகனப்பள்ளியில் பொதுமக்களிடம் அதிமுக எம்எல்ஏ., அசோக்குமார் குறைகேட்பு
கிருஷ்ணகிரி ஒன்றியம் போகனப்பள்ளியில் பொதுமக்களிடம் அதிமுக எம்எல்ஏ., அசோக்குமார் குறைகளை கேட்டறிந்தார்.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி ஒன்றியம் போகனப்பள்ளியில், அதிமுக எம்எல்ஏ., அசோக்குமார் இன்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டார். அப்போது அப்பகுதி மக்கள் அவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், போகனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து உள்ளது. இதனால் மாணவ, மாணவியர் சாலையைக் கடக்க மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். விபத்து ஏற்படும் அபாயத்தினால் சிலர் பள்ளிக்கே செல்வதில்லை. போகனப்பள்ளியில் முக்கால் ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு அரசு துவக்கப்பள்ளியைக் கட்டித்தர வேண்டும்.
போகனப்பள்ளிக்கு பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டுவர வேண்டும். ஒரு சில இடங்களில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. அங்கு தரைமட்ட குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும். இங்கு கடந்த 6 மாதங்களாக வயதான 50க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓஏபி வருவதில்லை. அவர்களுக்கு ஓஏபி பெற்றுத்தர வேண்டும். போகனப்பள்ளி கிராத்தின் நடுவில் உயர்மின் கோபுர விளக்கு அமைத்துத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதற்கு பதில் அளித்த எம்எல்ஏ., பள்ளிக் கட்டடத்திற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பணம் ஒதுக்கப்படும். பாதாள சாக்கடை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படும். குடிநீர் கிடைக்காத பகுதியில் உடனே குடிநீர் தொட்டி அமைக்கப்படும். மற்ற கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி உள்பட பலர் உடனிருந்தனர்.