எருது விடும் விழாவில் காயமடைந்தவர் மரணம்
கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழாவில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரியை அடுத்த வரட்டனப்பள்ளியில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த எருதுகளும் பங்கேற்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் இந்தப் போட்டியை பார்வையிட்டனர். இந்த எருது விழாவின்போது எருதுடன் கட்டப்பட்ட கயிறு காலில் சிக்கியது.
இதில் பெங்களூரு விஜய நகரத்தை சேர்ந்த பத்மநாபன்(41), என்பவர் காயம் அடைந்தார். அவரை பெங்களுரூவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கந்திகுப்பம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.