2 வயது குழந்தைக்கு கயிற்றால் அடி: கல் நெஞ்சையும் கரைய செய்யும் வீடியோ வைரல்
2 வயது மதிக்கத்தக்க குழந்தையை பெற்றோர்கள் கயிற்றால் அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
HIGHLIGHTS
சமீப நாட்களாக கள்ளக்காதல் விவகாரம் காரணங்களால் அதற்கு இடையூறாக இருக்கும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. இது போன்ற ஒரு விவகாரம் சம்பந்தமாக கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தைகளை சித்ரவதை செய்து அடித்து துன்புறுத்தும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மோட்டூர் கிராமத்தை சேர்ந்த துளசி என்ற பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் மீண்டும் அதிர்ச்சிகரமான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது அந்த வீடியோவில் கணவன் மனைவி மற்றும் இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்றுமாக வீட்டின் வெளியே அமர்ந்து கொண்டு தாயார் குழந்தைக்கு உணவு ஊட்டி கொண்டு இருக்கின்றனர்.
அப்போது குழந்தையின் தந்தை, குழந்தையை கயிறை கொண்டு முதுகு பகுதியில் தாக்கிவிட்டு கையால் சிறுவனின் கன்னத்தில் ஓங்கி அறைகிறார். இதில் குழந்தை வலி தாங்காமல் அழ அதனை தாயார் பார்த்து ரசித்து சிரிக்கிறார். அதனை தொடர்ந்து கணவன் மனைவியிடம் உணவை குழந்தைக்கு வழங்கவிடாமல் அருகில் இருக்கும் நாயின் தட்டில் கொட்ட சொல்கிறார். தாயாரும் அந்த உணவை நாயின் தட்டில் கொட்டிவிட்டு வீட்டிற்குள் செல்கிறார்.
தொடர்ந்து குழந்தையின் தந்தை வலி தாங்காமல் எழுந்து ஓடும் குழந்தையை பின் தொடர்ந்து சென்று கையில் வைத்திருக்கும் கயிற்றால் தாக்கிவிட்டு குழந்தைய வீட்டின் வெளியே தள்ளி வீட்டின் கதவை மூடிவிட்டு உள்ளே செல்கிறார். குழந்தை என்ன செய்வதென்று தெரியாமல் அங்கேயேயும் இங்கேயுமாக அழுதபடி நிற்கிறது. இதனை அவரது வீட்டின் அருகில் வசிப்பவர்கள் கண்டு வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளனர்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. மேற்கண்ட நபர்கள் யார் என்று கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தாக்குதலுக்கு உள்ளான குழந்தையை மீட்டு காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது.