பறவைகள் பாதுகாப்பு: குமரியில் இருந்து காஷ்மீருக்கு விழிப்புணர்வு பிரசாரம் பயணம்
பறவை இனங்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குமரியில் இருந்து காஷ்மீர்க்கு வாகன பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது
HIGHLIGHTS
தற்போது பறவை இனங்கள் அழிந்து வரும் நிலையில் பறவைகளை பாதுகாத்தால் நமது மண் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றும் அழிந்து வரும் பறவை இனங்களை பாதுகாக்க முயற்சி செய்யவேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதனிடையே பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சேவ் பேர்ட் சேவ் யுவர்செல்ஃப்(Save bird save yourself) என்பதை வலியுறுத்தி நடைபெறும் இருச்சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கியது.முன்னதாக தொடக்க நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர், மேலும் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்வு கன்னியாகுமரிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.தொடர்ந்து இருச்சக்கர வாகனபயணம் தொடங்கிய நிலையில் இந்த பயணம் மதுரை, சேலம், ஓசூர், பெங்களூர், ஹைதராபாத், குவாலியர், டெல்லி வழியாக காஷ்மீர் வரையிலான 3700 கிலோமீட்டர் தூரத்தை 15 நாட்களில் கடந்து பாகிஸ்தான் எல்லையான வாகா பார்டரில் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
இது குறித்து பேரணி ஒருங்கிணைப்பாளர் கூறும் போது, நாங்கள் பறவைகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக 15 பேர் இருசக்கர வாகனங்களில் இங்கிருந்து புறப்பட்டு காஷ்மீருக்கு செல்கின்றோம். நாங்கள் செல்லும் இடங்களில் ஆங்காங்கே கல்லூரி மாணவர்கள் வரவேற்பளித்து வருகின்றனர் என்றார்.