குமரியில் சூரிய உதயம், அஸ்தமனம் காண தடை விதிப்பு - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
முக்கடல் சங்கமிக்கும் குமரியில், சூரிய உதயம் மற்றும் அஸ்தமனக் காட்சியை காண பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்ததால், குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களான கன்னியாகுமரி, திற்பறப்பு, மாத்தூர் தொட்டி பாலம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்லவும் பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
தற்போது தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது; சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்லவும் பார்வையிடவும் தமிழக அரசு அனுமதி வழங்கியது. எனினும், முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்லவும் சுற்றுலா தலங்களை பார்வையிடவும் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.
அதேநேரம், கோவில்கள் திறக்கப்பட்டதால் குமரியில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், காலை சூரிய உதய காட்சி மற்றும் மாலையில் சூரிய அஸ்தமனக் காட்சியை காண கடற்கரையில் கூடி வருகின்றனர்.
எனினும், சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடித்து வருவதை அடுத்து, சூரிய உதயம், அஸ்தமனக் காட்சியை காண திரளும் பொதுமக்களை, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கடற்கரையில் இருந்து திருப்பி அனுப்பினர். தடையை மீறி கடற்கரைக்கு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர், இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.