கொள்முதல் செய்யாததால் சாலையில் நெல்லை கொட்டி வைத்த விவசாயிகள்
குமரியில், கொள்முதல் செய்யப்படாததால், சாலையில் நெல்லை விவசாயிகள் கொட்டி வைத்து, வேதனையை வெளிப்படுத்தினர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில், முதன்மை விவசாயமாக இருக்கும் நெல் விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், அரசு அதிகாரிகள் செயல்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். தாழக்குடி பகுதியில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லை, கொள்முதல் செய்ய அரசு முன் வராததால் தெருக்களிலும், சாலைகளிலும் நெல்லை கொட்டி வைத்துள்ள விவசாயிகள் அதனை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
இதனிடையே அப்பகுதியில் பொதுமக்களை சந்திக்க சென்ற, கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான தளவாய் சுந்தரத்தை சந்தித்த விவசாயிகள், தங்கள் நிலையை விளக்கி உதவி கேட்டனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தளவாய் சுந்தரம், விவசாயிகள் நலனை பாதுகாக்காமல் உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் செய்யாமல், அரசு வஞ்சகம் செய்வதாக விவசாயிகள் குமுறுவதை குறிப்பிட்டார்.
அத்துடன், மாவட்ட நிர்வாகம், வேளாண் துறை உள்ளிட்ட அரசு துறைகள் கைவிரித்த நிலையில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்களோடு தானும், அதிமுகவினரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.