விதிமீறல்: குமரியில் ஒரே நாளில் 1973 வாகன ஓட்டிகள் மீது வழக்கு
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக குமரியில் ஒரே நாளில் 1973 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில், விதிமுறைகளை மீறி வாகனங்கள் இயக்கப்படுவதாகவும், தலைக்கவசம் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்கள் இயங்குவதோடு அதிவேகமாக இயக்கப்படுவதால் விபத்துகள் அதிகரிப்பது காவல்துறையின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் தலைக்கவசம் அணியாமல், உரிய ஆவணங்கள் இல்லாமலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுகின்ற வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க, வாகனச்சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் போக்குவரத்து பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில், தலைக்கவசம் இல்லாதது, உரிய ஆவணங்கள் இல்லாதது என பல்வேறு காரணங்களால் ஒரே நாளில் 1973 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 3 மாதங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.