இருசக்கர வாகனத்தை திருட முயற்சி: கையும் களவுமாக சிக்கிய வாலிபருக்கு தர்மஅடி
குமரியில் இருசக்கர வாகனத்தை திருடி விற்பனை செய்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் ஊர்மக்கள்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட எல்லைப்பகுதிகளில் தினசரி இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இரவுகளில் வீடுகளில் நிறுத்தி இருக்கும் இரு சக்கர வாகனங்களை குறி வைத்து திருடிச் செல்வது அப்பகுதியில் வாடிக்கையாக உள்ளதாக ஊர் மக்கள் தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்படும் நபர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று சாமிதோப்பு அய்யா வைகுண்டர் ஆலயம் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை திருடிச் செல்ல முயற்சித்த போது அப்பகுதி ஊர்மக்கள் பைக்கை திருட முயற்சித்த வாலிபரை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அந்த இளைஞரை அப்பகுதியில் உள்ள வீட்டில் கட்டி வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வருவதற்கு முன்பு அந்த இளைஞர் போதையில் இருந்ததால் அப்பகுதி மக்களை மிரட்டும் தோணியில் பேசுவதை ஒருவர் செல்போனில் படம் எடுக்க அது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதனிடையே வாலிபரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், இவனது பெயர் செந்தில் குமார் (39) குஞ்சன்விளை ஊரை சேர்ந்தவர் என்பதும் இவனுடன் கூட்டாளியான திருவண்ணாமலையை சேர்ந்த மணிகண்டன்(32) என்பவரும் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இந்நிலையில் மணிகண்டனையும் கைது செய்த போலீசார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.