முன்மாதிரி கிராமம் தமிழகத்தின் முன்மாதிரியாக திகழும்: எம்.பி க.செல்வம்
காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினரால் தத்தெடுக்கப்பட்ட முத்துவேடு கிராமத்தில் எம்.பி., க.செல்வம் தலைமையில் மனு நீதி நாள் நடைபெற்றது.
HIGHLIGHTS
நாடாளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராம திட்டத்தின் (சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா) கீழ் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வத்தின் தத்தெடுப்பு கிராமமாக காஞ்சிபுரம் ஒன்றியத்தின் முத்துவேடு ஊராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டது.
முத்துவேடு ஊராட்சியில் 2019 முதல் 2024 வரை ஐந்தாண்டுகளில் கிராம ஊராட்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து துறை சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக முத்துவேடு ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது.
இம்முகாமில் ஓய்வூதியம், உதவித்தொகை மற்றும் இதர நலத்திட்ட உதவிகள் வழங்கக் கோரிய மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மனுக்களை பரிசீலித்து உடனடியாக தீர்வு காண வழிவகை செய்யப்படும்.
முத்துவேடு ஊராட்சியை முழு தன்னிறைவு பெற்ற கிராம ஊராட்சியாக மாற்றும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊராட்சியின் வளர்ச்சி மட்டுமல்லாமல் தனிநபர் வளர்ச்சி அடைந்திட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தத்தெடுத்த பின் குடிநீர், தரமான சாலைகள், விவசாயத்திற்கு தேவையான திட்டங்கள், நெல் கொள்முதல் நிலையங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், சுகாதாரம், தனிநபர் கழிவறை, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை போன்ற பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2024 ஆம் ஆண்டில் முடிவில் முத்துவேடு கிராம ஊராட்சியானது தன்னிறைவு பெற்ற கிராம ஊராட்சியாக மாறிவிடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
அரசுத் துறை அலுவலர்கள் திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். எனவே, பொதுமக்கள் தமிழக அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு முத்துவேடு கிராம ஊராட்சியை தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாற்றிட முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.மா.ஆர்த்தி கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.ஸ்ரீதேவி, காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மலர்கொடிகுமார் மற்றும் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.