/* */

பொது சுகாதாரத் துறையினர் கலந்து கொண்ட மினி மாரத்தான் போட்டி: எஸ்.பி துவக்கி வைத்தார்

தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை தொடங்கி நூறு ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் ஐந்து வட்டார துறை அலுவலர்கள் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி நடைபெற்றது

HIGHLIGHTS

பொது சுகாதாரத் துறையினர் கலந்து கொண்ட மினி மாரத்தான் போட்டி: எஸ்.பி துவக்கி வைத்தார்
X

பொது சுகாதாரத் துறை நூற்றாண்டை ஒட்டி காஞ்சி மாவட்டம் சார்பில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற ஊழியருக்கு சான்றிதழ் துணை இயக்குனர் மருத்துவர்.      பா.பிரியாராஜ் வழங்கிய போது.

1922ஆம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேய இந்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை. 2022ஆம் ஆண்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்தது. மக்கள் நலப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. நோய்க்கான மருத்துவத்திற்கு மக்கள் பல இடங்களை தேடி அலைந்த காலம் போய், மக்களைத் தேடி மருத்துவமே வருகின்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.

பெரியம்மை, போலியோ, நரம்பு சிலந்தி போன்ற நோய்கள் ஒழிக்கப்பட்டுவிட்டன. யானைக்கால், தொழுநோய், தட்டம்மை, இரண ஜன்னி, மலேரியா, மூளைக்காய்ச்சல், காசநோய் போன்ற நோய்கள் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. உலகமே வீட்டுக்குள் முடங்கிய நிலையில் கொரோனா நோய்த்தொற்றை களத்தில் நின்று போராடி, தடுப்பூசியை பொதுமக்களிடையே கொண்டு சென்று கட்டுக்குள் வைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது

இந்நிலையில்தான், தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை தோற்றுவிக்கப்படு நூறாண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக பல்வேறு போட்டிகள், மாநில மற்றும் மாவட்ட அளவில் நடைப்பெற்று வருகிறது

இதன் தொடர்ச்சியாக மினி மாரத்தான் சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் 27.11.2022 அன்று நடைபெறவுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பொது சுகாதாரத்துறையின் சார்மாக மினி மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டு லிம்கா சாதனை புத்தகத்தில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரத்தில் பொது சுகாதாரத்துறையின் சார்பாக உடற்தகுதியுடைய 18 முதல் 50 வயதிற்குட்பட்ட பங்கேற்பாளர்கள் பங்கு பெறும் மினிமாரத்தான் போட்டி இன்று காலை 6.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அவ்வகையில் காலை நடைபெற்ற மினி மாறத்தான் போட்டியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா , காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பிரியாராஜ் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் துவங்கி வைத்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து துவங்கிய ஐந்து கிலோ மீட்டர் மினி மாரத்தான் போட்டி காவலான்தெரு , மேட்டுத்தெரு, வள்ளல் பச்சையப்பன் தெரு, மூங்கில் மண்டபம் வழியாக சென்று சேக்குப்பேட்டை நடுத்தெரு, ரயில்வே ரோடு தடத்தில் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார நலப் பணிகள் கீழ் இயங்கும் திருப்புகுழி வாலாஜாபாத், மதுரமங்கலம், குன்றத்தூர், உத்திரமேரூர் ஆகிய வட்டாரத்தில் பணிபுரியும் அனைத்து நிலை ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த போட்டியில் பங்கேற்று ஓடி நிறைவு செய்தனர்.

இறுதி நிகழ்வாக மாவட்ட நலப் பணிகள் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ஆண்கள் பிரிவில் முதலாவதாக வந்த மதுரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய கணினி பதிவாளர் சோமசுந்தரம் முதலிடத்தையும், டெங்கு தடுப்பு பிரிவு ஊழியர் விஜய் இரண்டாவது இடத்தினையும், திருப்புட்குழி ஆரம்பம் சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சிவப்பிரகாஷ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

இதே போல் பெண்கள் பிரிவிலும் மூன்று இடங்களை பிடித்த ஊழியர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார நலப் பணிகள் துணை இயக்குனர் பா.பிரியாராஜ் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள் உமாதேவி , அருண்மொழி , ஷியாம் ஜெய்சங்கர் முருகன் மற்றும் மாவட்ட மலேரியா அலுவலர் மணிவர்மா, மருந்தாளுனர் வே பழனிவேலன் உள்ளிட்ட ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Nov 2022 2:30 PM GMT

Related News