உலக பூமி தினத்தை முன்னிட்டு மண் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
காஞ்சிபுரத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மண் காப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மண் காப்போம் என்ற நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சுழற் சங்க மாவட்ட ஆளுநர் பி.பரணீதரன் தலைமை வகித்து மரக் கன்றுகளையும் நட்டார். மருத்துவர்கள் சரவணன், மனோகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சொக்கலிங்கம் மண் வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக பேசினார்.
மண் காப்போம் என்ற பதாகையை ஈஷா அறக்கட்டளையின் தொண்டர்கள் பலரும் கையில் பிடித்தவாறு மரங்களைக் காப்போம், மண்ணைக் காப்போம் என்றும் கோஷங்களை எழுப்பினார்கள். மண்ணைப் புத்துயிர் பெறச் செய்வது எப்படி என்ற தலைப்பில் விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் எழிலன் பேசினார். காஞ்சி அன்னச்சத்திர நிர்வாகி மோகன் உட்பட ஈஷா அறக்கட்டளையின் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.