அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் தாய் சேய் நல ஊர்தி இயக்க கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவித்த தாய்மார்களை வீடுகளுக்கு கொண்டு சேர்க்கும் பணியை தாய் சேய் நல ஊர்தி வாகனம் செயல்பட்டு வருகிறது.
HIGHLIGHTS
தமிழ்நாடு சுகாதார திட்டத்தின்கீழ் தாய்–சேய் ஊர்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த சேவை அரசு மருத்துமனையில் பிரசவித்த தாய் மற்றும் குழந்தையை அவரவர் இருப்பிடத்திற்கு சென்று விடுவதற்கும், அதன் பின்னர் ஓராண்டிற்கு குழந்தைக்கு போடப்படும் தடுப்பூசிக்காகவும், சிகிச்சைக்காக வரும் தாய் மற்றும் குழந்தைகளை மருத்துவமனையிலிருந்து அவர்கள் இல்லத்திற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சேவை பெற சிறப்பு தொலைபேசி தொலைபேசி எண்‘102‘ அறிவிக்கப்பட்டது. இதற்கு எந்த ஒரு நபருக்கும் சன்மானம் கொடுக்க தேவையில்லை. இத்திட்டம் முற்றிலும் ஒரு இலவச சேவை திட்டமாகும்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் 15 லிருந்து 25 பிரசவித்த தாய்மார்களை அவரவர் இல்லங்களில் சேர்க்கும் பணியை இவ்வாகனம் மேற்கொண்டு வருகிறது.
நாள்தோறும் சுமார் 200 கிலோ மீட்டர் பயணிக்கும் இந்த வாகனத்தில், ஒரு நடைக்கு (TrIp) சுமார் 8 பிரசவித்த தாய்மார்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் என 16 பேர் அழைத்துச் செல்லப்பட்டு அவர்களது இல்லங்களில் விடப்படுகின்றனர்.
சில சமயங்களில் கூடுதலான தாய்மார்களின் எண்ணிக்கை உள்ளதால் தாய் சேய் நல ஊர்தி வாகனத்தை காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூடுதலாக வேண்டும் என்ற கோரிக்கையும் இழந்துள்ளது.
மேலும் சில நேரங்களில் அரசு திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளாமல் , அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யபட்ட தாய்மார்கள் காத்திருக்காமல் ஆட்டோக்களில் ஆபத்தாக பயணிக்கின்றனர்.
எனவே சுகாதாரத்துறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் கூடுதல் வாகனங்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல ஆயிரம் தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில் அவர்களது சமூக பங்களிப்பு திட்டத்தில் ( CSR Activities ) இது போன்ற வாகனங்களை பெற்று, செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்து வருகிறது.