மாகரல் திருமாகறலீஸ்வரர் மாசி மக பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது
காஞ்சிபுரம் அடுத்த மாகரல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திருபுவன நாயகி சமேத திருமாகறலீஸ்வரர் ஆலயம் எலும்பு சம்பந்த நோய் தீர்க்கும் பரிகார தலமாக விளங்குகிறது .
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அடுத்த மாகறல் கிராமத்தில் ஸ்ரீ திருபுவன நாயகி சமேத திருமாகறலீஸ்வரர் கோவிலில் மாசி மக பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது.
மாகறலெனும் இந்தப் புண்ணிய இடம் தொண்டை நாட்டின் கண் காஞ்சி மாநகருக்கு தென்பால் 15 கி.மி. தூரத்தில் அமைந்துள்ளது.
இக்கோயில் சைவ சமய குரவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளின் திருப்பதியம் பெற்று, நிடகாவ கண்டாகா சச்சிதானந்த சொரூபியாயும், சுயம்புலிங்க வடிவாயும், இராஜேந்திர சோழனைத் தடுத்தாட் கொண்டும் பிரம்மன், இந்திரன் தாரை, சந்திரன், அருத்தியன், மளையன், மாகறன், காசிபன் இவர்களால் வழிபடப்பட்டும் பன்னிரண்டு திருநாமங்கள் பெற்றும் ஸ்ரீதிருபுவன நாயகியம்மை சமேதராய் எழுந்தருளியுள்ள அருள்மிகு திருமாகறலீஸ்வரர்.
ஆண்டுதோறும் மாசி மாதம் மாசி மக பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அவ்வகையில் மாசி மகப் பெருவிழா நாளது சுபகிருது வருஷம் மாசி மாதம் 13 ஆம் தேதி (25-02-2023) சனிக்கிழமை காலை 4-30 மணிக்குமேல் 6-00 மணிக்குள் அஸ்வினி நட்சத்திரம் சித்தியோகம், மகர லக்கினத்தில், துவாஜாரோகனம் செய்யப்பட்டது.
திருக்கோவிலில் முக்கிய நிகழ்வான வரும் 27 ஆம் தேதி காலை பூத வாகனமும், மாலை மாவடி செய்து உற்சவமும், மார்ச் மாதம் 3ஆம் தேதி திருத்தேர் உற்சவம், மார்ச் 6ஆம் தேதி தீர்த்தவாரி உற்சவமும், மார்ச் 10ஆம் தேதி வசந்த உற்சவத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.
கொடியேற்றம் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருத்தளத்தில் ஒரு மண்டலம் தங்கி இருந்து நாள்தோறும் திருக்கோயிலை வலம் வந்தால் எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும் என்பதும் சோமவார திங்கட்கிழமை வெகு விமர்சையாக ஓதுவார் பாட பக்தர்கள் பின்பற்றி பாடி ஈசனை வழிபடுவது இன்றும் வழக்கமாக உள்ளது.
இதே போல் ,சக்தி பீட தலங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை ஒட்டி நடைபெற்ற முதல் நாள் உற்சவத்தில் வயலட் நிற பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், மனோரஞ்சித பூ, ஏலக்காய் மாலை அணிந்து லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன் காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் மேள தாளங்கள் முழங்க காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் வலம் வந்தார். ராஜ வீதிகளில் வலம் வந்த காமாட்சி அம்மனை வழிநெடுகிலும் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர்.