காஞ்சிபுரம்: இறந்தவர் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்சில் கட்டண கொள்ளை!
காஞ்சிபுரத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை ஆம்புலன்சில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆறுநூறுக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் பலர் வயது முதிர்வு , நோய் பரவி காலதாமதமாக வருதல் மற்றும் இணை நோய் காரணங்களுக்காக மரணம் அடைவதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கபடுகிறது.
இந்நிலையில் இறந்த நபர்களின் உடலை காஞ்சிபுரம் பெருநகராட்சி துப்புரவு ஆய்வாளர் முன்னிலையில் உறவினர்கள் சுமார் 4 கிமீ தூரம் உள்ள தாயார்குளம் மற்றும் வெள்ளைகுளம் மின் மயானத்தில் தகனம் செய்யபடுகிறது.
இதற்காக உடலை எடுத்து செல்ல போதிய அரசு அமரர் ஊர்தி இல்லாததால் தனியார் ஆம்புலன்சை நாடும்போது அவர்கள் அதிக கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாகவும் , இதைக் கேட்டால் மிரட்டுவதாகவும் உறவினர்கள் கடும் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
ஆம்புலன்ஸ் விவகாரங்களில் அரசு தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற கட்டணக் கொள்ளையில் இருந்து விடுவிக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
பல இன்னலுக்கு இடையில் இறந்தவர்களுக்கு சரியான முறையில் ஈமக்கிரியை கூட செய்ய முடியாத இக்காலகட்டத்தில் தனியார் ஆம்புலன்ஸ் அதிக கட்டணம் வசூலிப்பது ஏழை எளியோரை அதிக அளவில் பாதிப்பது நிதர்சனமான உண்மையாக உள்ளது.