காஞ்சிபுரம்: செத்துப்போய்டுவோம்...!கொரோனா பரிசோதனைக்கு அஞ்சும் மக்கள்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கம்மராசம்பட்டி கிராம மக்கள் கொரோனா பரிசோதனை, ஊசிக்கு அஞ்சும் நிலை உள்ளது. இதனை போக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் பரிசோதனை முகாம்கள் மற்றும் தடுப்பூசி முகாம்களை நடத்த மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.
இதன்படி இன்று கம்மராசபுரம் கிராமத்தில் கொரோனா பரிசோதனை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் காலை 10 மணிக்கு சுகாதார துறை அலுவலர்கள் , ஒன்றிய அலுவலர்கள் , கிராம உதவியாளர் என அனைவரும் தயாராக இருந்தனர். ஆனால், போதிய பொதுமக்கள் பரிசோதனைக்கு வரவில்லை.
உடனடியாக துணை ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து முகாம்,பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டது.சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வரும் இவ்வூரில், மதியம் 12 வரை 17 பேர் மட்டுமே முகாம் அருகிலிருந்த காரணத்தால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதுகுறித்த கள ஆய்வில், பரிசோதனை முடிவுகள் தவறாக வருவதாகவும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நடிகர் விவேக் போல் செத்து விடுவோம் என்கிற பயத்திலும், அறியாமையிலும் உள்ளனர் என்பது அம்பலமானது.
முகாம் நடத்த பல ஆயிரம் செலவு , அரசு ஊழியர்களின் பணி விரயம் என பலவகைகளில் இதுபோன்று சில நாட்களாக நடைபெறுகிறுது என சுகாதார துறையினர் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
ரூ2ஆயிரம் வாங்க குவிந்து வந்த மக்கள், தன்னுயிர் காக்க பரிசோதனை, தடுப்பூசி செலுத்த தயங்கும் நிலை போக்க தீவிர விழிப்புணர்வு கிராமத்தில் தேவை என்பது இக்கிராம செயலே உணர்த்துகிறது..