காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் ஆரம்ப நிலை சிகிச்சை மையம் திறப்பு...
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகள் ஆரம்ப நிலை சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ. 1.13 கோடி மதிப்பில் குழந்தைகள் ஆரம்ப நிலை சிகிச்சை மையம் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. அந்த மையத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் திருச்சில் இலிருந்து காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரத்தில் புதியதாக கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர். விழாவில், சுகாதாரத்துறை துணை இயக்குநர் (பொறுப்பு) செந்தில் குமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் நித்யா சுகுமார், துணை மேயர் குமரகுருபரன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரியாராஜ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிவசண்முக சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி குறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 636 பள்ளிகள், 940 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. அவற்றில் உள்ள மாணவர்கள், குழந்தைகளை அவர்கள் இருப்பிடங்களுக்கே சென்று அவர்களுக்கு எதேனும் நோய்கள் இருக்கிறதா? எனக் கண்டறிந்து அவர்களை குழந்தைகள் ஆரம்ப நிலை சிகிச்சை மையத்துக்கு அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்வதற்கென்று தனியாக புதியதாக இந்தக் கட்டிடம் கட்டி முடித்து முதல்வரால் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் உள்ள மாணவ, மாணவியர்களை நேரில் சென்று பரிசோதிக்க ஒரு குழுவில் தலா 5 பேர் அடங்கிய 10 குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளது என ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்தார். ஏற்கெனவே குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்களில் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உணவுகளை பரிந்துரைத்து இலவசமாக அரசு சார்பில் வழங்கி அவர்களது உடல் நலனின் மாறுபாடுகளை அவ்வப்போது ஆய்வின் மூலம் கண்டறிந்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.