காஞ்சிபுரத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி
காஞ்சிபுரத்தில் 1331 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மூலம் பெண்களுக்கான திருமண நிதியுதவி திட்டம் கடந்த 2011 ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அப்போது 4 கிராமாக வழங்கப்பட்டதை உயர்த்தி 8 கிராம் தங்கம் மற்றும் நிதியுதவி தற்போது வழங்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 60 ஆயிரத்து 526 பயனாளிகளுக்கு ரூ.204 கோடி நிதியுதவியும் , 313.95 கிலோ கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 2020- 21 ஆம் ஆண்டில் 10 , பனிரெண்டாம் வகுப்பில் பயின்ற 619 பேர் , பட்டம் பயின்ற 712 பேர் என 5 ஒன்றியத்தை சேர்ந்த 1331 பேருக்கு ரூ.5.11 கோடி நிதியுதவியும் , ரூ.5.24 கோடி மதிப்பிலான தங்கத்தினை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற விழாவில் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் பயனாளிகளுக்கு வழங்கினார்.
இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் பழனி , சமூகநலத்துறை அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து இரு இடங்களில் அம்மா மினி கிளினிக் , 50 நபர்களுக்கு கறவை மாடுகள் ஒரு நியாய விலைக்கடை ஆகிய நிகழ்விலும் கலந்து கொண்டு ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் துவக்கி வைத்தார்.