திருக்கோவிலுார் தொகுதியில் மழை வெள்ள சேதத்தினை அமைச்சர் நேரில் ஆய்வு
திருக்கோவிலுார் தொகுதியில் மழை வெள்ள சேதத்தினை அமைச்சர் பொன்முடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். கனமழையின் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கன அடி நீர் பாய்ந்ததால் ஆற்றங்கரையை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது.
மணம்பூண்டி, ஓம்சக்தி நகரில் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். கலெக்டர் ஸ்ரீதர், எம்.எல்.ஏ., புகழேந்தி, தாசில்தார் ஜெயலட்சுமி, பி.டி.ஓ., சீனுவாசன், சாம்ராஜ், மாவட்ட துணைச் செயலாளர் முருகன், சேர்மன் தனலட்சுமி உமேஸ்வரன், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், பிரபு, மாவட்ட கவுன்சிலர் ராஜீவ் காந்தி உடனிருந்தனர்.
தொடர்ந்து முகையூரில் நரிக்குறவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அருளவாடி - பையூர் இடையேயான தரைப்பாலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. சேத்துார், பையூர், உள்ளிட்ட 3 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த அமைச்சர் உயர்மட்ட பாலம் கட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கலெக்டருக்கு அறிவுறுத்தினார்