கோமுகி அணையில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
கச்சிராயபாளையம் கோமுகி அணையில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையின் அடிவாரத்தில் உள்ள கோமுகி அணை மூலம், 40 கிராமங்களில் உள்ள 11 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 46 அடி கொண்ட அணையின் முழு கொள்ளளவு, 560 மில்லியன் கன அடி ஆகும். தற்போது நீரின் அளவு, 44 அடியாக உயர்ந்து 489.56 மில்லியன் கன அடி நீர் நிரம்பியுள்ளது.
இதைத் தொடர்ந்து, அணையில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிக்கண்ணன் முன்னிலை வகித்தனர். பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் பாஸ்கரன் வரவேற்றார். அமைச்சர் வேலு சிறப்பு விருந்தினராக பங்கேற்று தண்ணீரை திறந்து வைத்தார்.
முதல் 45 நாட்களுக்கு, புதிய பாசன கால்வாயில் 50 கன அடி வீதமும், பழைய பாசனமான கோமுகி ஆற்றில் 60 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது. நிகழ்ச்சியில், சின்னசேலம் தாசில்தார் அனந்தசயனன், ஒன்றிய சேர்மன்கள் சத்தியமூர்த்தி, அலமேலு ஆறுமுகம், உதவி செயற்பொறியாளர் கோவிந்தராஜ், உதவி பொறியாளர்கள் சுதர்சன், பிரபு, கணேசன் மற்றும் பாசன சங்க விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.