ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் நாளை மாலை ஓய்கிறது
ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தைக்கு சென்று வியாபாரிகளிடம் உதயசூரியன் சின்னத்துக்கு திமுக வேட்பாளர் சந்திரகுமார் இன்று (2ம் தேதி) காலை வாக்கு சேகரித்த போது எடுத்த படம்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரம் நாளை (பிப்.3) மாலையுடன் முடிவடைவதால் திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதனால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்த நடவடிக்கை எடுத்தது. அதன்படி வருகிற 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்தியா கூட்டணி சார்பில் திமுக தனது வேட்பாளரை நேரடியாக களத்தில் இறக்கி உள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பா.ஜனதா கூட்டணி கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்தன.
இதனால் ஆளும் கட்சியான திமுகவை எதிர்க்கும் முக்கிய கட்சியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்துள்ளது. திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாலட்சுமி ஆகியோர் உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நாளை (3ம் தேதி) மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. அதைத்தொடர்ந்து வெளியூர்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வருகிற 5ம் தேதி (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, சித்தோட்டில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu