திண்டுக்கல் மருத்துவமனையில் தடுப்பூசி போட குவிந்த மக்கள்
திண்டுக்கல் மாநகராட்சி கமலா நேரு மருத்துவமனையில் தடுப்பூசி போட குவிந்த மக்கள்
HIGHLIGHTS
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோன வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 290-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க தொற்று பரவலால் அதிர்ச்சியடைந்த திண்டுக்கல் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனை, மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கமலா நேரு அரசு மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் கமலா நேரு அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக ஏராளமானோர் குவிந்தனர். இதனால் எங்கே தங்களுக்கு தடுப்பூசி கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் சமூக இடைவெளியை மறந்து கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கும் வகையில் நெருக்கமாக நின்றபடி பொதுமக்கள் காத்திருந்தனர். அவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருந்தது சற்று ஆறுதல் தருவதாக இருந்தது.பின்னர் மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட வந்தவர்களின் விவரங்களை பதிவு செய்து அவர்கள் விருப்பப்படி கோவாக்சின், கோவிஷீல்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தடுப்பூசி செலுத்தினர்.
இதற்கிடையே தடுப்பூசி போடுவதற்காக மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது இதையடுத்து ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி விட்டு 2-வது டோஸ் தடுப்பு ஊசி போட வந்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என்று மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நாங்கள் காலையிலிருந்து நீண்ட வரிசையில் காத்திருக்கிறோம். எங்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று மருத்துவ குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அவர்கள் அனைவருக்கும் நாளை (நேற்று) தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறி மருத்துவ நிர்வாகத்தினர் அனுப்பி வைத்தனர்.