வீட்டில் கஞ்சா பதுக்கல்- கணவன், மனைவி கைது
திண்டுக்கல் அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த கணவன், மனைவி உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள கொத்தம்பட்டி பகுதியில் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக தாடிக்கொம்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் வீட்டினை சோதனை செய்த தாடிக்கொம்பு போலீசார் வீட்டு வாசலில் உள்ள கொட்டகை ஒன்றில் 5 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து கணேசன் அவரது மனைவி சாந்தி, மகன் சக்திவேல் ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல் தாடிக்கொம்பு சாலையில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வந்த மோட்டார் பைக்கை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அந்த பைக்கில் , 5 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பைக்கை ஓட்டி வந்த சரவணகுமார், உடன் வந்த கண்ணன் மற்றும் பாண்டியன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய கோபி என்ற நபரை தேடி வருகின்றனர்.தொடர்ந்து இவர்கள் 6 பேரும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.