சென்னகேசவ பெருமாள் கோவிலில் பீஷ்ம ஏகாதசி குங்குமார்ச்சனை
தர்மபுரி சென்னகேசவ பெருமாள் கோவிலில் பீஷ்ம ஏகாதசி குங்குமார்ச்சனையில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
HIGHLIGHTS
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலில் பீஷ்ம ஏகாதசி விழா நடைபெற்றது. விழாவையொட்டி சூடிக் கொடுத்த சுடர்கொடியாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சுடர்க்கொடியாள் சூடிக்கொடுத்த மாலை திருவீதி உலா நடைபெற்றது. அப்போது மாரியம்மன் கோவிலில் இருந்து சீர்வரிசை அழைப்பும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான நேற்று முதல், திருப்பள்ளி எழுச்சி பாராயணத்துடன் சாமிக்கு பீஷ்ம ஏகாதசி குங்குமார்ச்சனை நடைபெற்றது. மேலும் 10 கால சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் கணபதி, அஷ்டதிக் பாலர்கள் மற்றும் நவகோள்கள் பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகளுடன், சிறப்பு அலங்கார சேவையும் நடைபெற்றது.
பின்னர் சுதர்சன யாகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு, விழா குழுவைச் சேர்ந்த செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள் சிறப்பு பிரசாதம் வழங்கினர். இந்த விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம நவமி விழாக்குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்திருந்தனர்.