கணவன் மனைவியை ஊரை விட்டு தள்ளி வைத்த கிராம முக்கியஸ்தர்கள்
கட்டப் பஞ்சாயத்து அமைப்பு எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கணவனும் மனைவியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.
HIGHLIGHTS
கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த பஞ்சம் குப்பம் ரோடு தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்-தேவி.கணவன் மனைவி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார்.
அம்மனுவில், எங்கள் ஊரில் 16 வயது சிறுமிக்கு கடந்த 16.06. 2021 அன்று திருமணம் நடைபெற்றது. இதுதொடர்பாக காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்ததாக ஊர் முக்கியஸ்தர்கள் தவறுதலாக புரிந்து கொண்டுள்ளனர். மேலும் ஊரில் ஊர் முக்கியஸ்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து என்னை ஊரை விட்டு ஒதுக்கி விட்டனர்.
நாங்கள் நத்தம் புறம்போக்கு பகுதியில் வீடு கட்டி 17 ஆண்டு காலமாக வசித்து வருகிறோம். இந்த நிலையில் எங்களை ஊரில் இருக்கக்கூடாது, கோவில் விசேஷங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் ஊரில் நடக்கும் சுக துக்க நிகழ்வுகளில் பங்கேற்க கூடாது எனவும் கூறி இழிவுபடுத்தி ஊரை விட்டு விலக்கி வைத்துள்ளனர் என கணவன் மனைவி இருவரும் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அவர்களை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.