கடலூர் எம்.பி. தொழிற்சாலையில் தொழிலாளி உயிரிழப்பு- உறவினர்கள் முற்றுகை போராட்டம்
கடலூர் எம்.பி.யின் தொழிற்சாலையில் தொழிலாளி மர்மமாக இறந்ததை கண்டித்து எம்.பி.யை கைது செய்யக்கோரி உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
HIGHLIGHTS
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். பா.ம.க நிர்வாகியான இவர் கடலூர் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்ற கோவிந்தராஜ் வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில் கோவிந்தராஜின் மகனுக்கு தொழிற்சாலையில் அவரது தகப்பனார் இறந்து விட்டதாக தகவல் கூறியுள்ளனர்.
அதன்பேரில் சென்னையில் இருந்து விரைந்து வந்த மகன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த தந்தையை பார்த்தபோது அவரது கன்னம்,காது போன்ற பல இடங்களில் காயம் இருந்ததைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் நேற்று காடாம்புலியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பி. ரமேசை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி பண்ருட்டி -கும்பகோணம் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். கோவிந்தராஜ் முந்திரி கம்பெனியில் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு காரணமானவர்களை கைது செய்யவேண்டும் என கோஷம் எழுப்பினார்கள். இதுபற்றி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காடாம்புலியூர் போலீசார் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மர்மமாக உயிரிழந்த தொழிலாளியின் இழப்புக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரியும், உயிரிழந்த கோவிந்தராசு குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டியும் இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறவினர்கள் மற்றும் பா.ம.க.வினர் மனு அளிக்க வந்தனர்.
அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையுடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பிறகு ஒரு மணி நேரமாக மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் முன்னிலையில் உறவினர்கள் மற்றும் பா.ம.க. நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில் கோவிந்தராஜ் மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.