கடலூர் மாநகராட்சி குப்பை கிடங்கு அமைக்க விரைவில் நடவடிக்கை: மேயர்
அரசு நிபந்தனைக்கு உட்பட்டு கடலூர் மாநகராட்சி குப்பை கிடங்கு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் சுந்தரி ராஜா தெரிவித்தார்
HIGHLIGHTS
கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில், பொதுமக்கள் குப்பைகளை அங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகளில் போட்டுச் செல்கின்றனர். மேலும் பல பகுதிகளில் துப்புரவு ஊழியர்கள் நேரில் சென்று குப்பைகளை வாங்கி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கொண்டு செல்கின்றனர்.
கடலூர் கம்மியம்பேட்டை மற்றும் முது நகர் பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த குப்பைக்கிடங்கில் குப்பைகள் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வந்தது. தற்போது அங்கு டன் கணக்கில் குவிந்திருந்த குப்பைகள் சேர்ந்ததால், கிடங்கில் கொட்டுவதற்கு போதுமான இடம் இல்லாமல் ஆறுகள் கரையோரம், பொதுமக்கள் வசிக்காத இடம் என குப்பைகளை கொட்டி வருவகின்றனர். இதனால், பொதுமக்கள் மற்றும் பல்வேறு சங்கங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மேலும் கவுன்சிலர்களும் குப்பை கொட்டுவதற்கு புதிதாக இடத்தை உடனடியாக தேர்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இன்று காலை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன், தாசில்தார் பூபாலச்சந்திரன், மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி ஆகியோர் கடலூர் அருகே வெள்ளை பாக்கம் பகுதிக்கு நேரில் சென்றனர். பின்னர் அங்கு குப்பை கிடங்கு அமைப்பதற்கு இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனை செய்தனர்.
அப்போது மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கூறுகையில், கடலூர் மாநகராட்சி பகுதியில் இருந்து அகற்றப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு உடனடியாக இந்த பகுதியில் அரசு நிபந்தனைக்கு உட்பட்டு குப்பை கிடங்கு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த பகுதியில் ஏற்கனவே குப்பைகள் கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் பொதுமக்களிடம் உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி குப்பை கிடங்கு அமைப்பதற்கு வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரியவருகிறது.