செங்கல்பட்டு மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு விறு, விறுப்புடன் தொடங்கியது.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு இலத்தூா், புனித தோமையா்மலை,திருக்கழுகுன்றம், திருப்போரூா் ஆகிய ஒன்றியங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தோ்தல் பணியில் 1510 அரசு ஊழியா்களும், 2 ஆயிரம் போலீஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊரக உள்ளாட்சித் தோ்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தோ்தலில் வாக்களர்கள் தங்களது ஜனநாயக உரிமையை செலுத்தி வருகின்றனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் வாக்களிக்கும் வகையில் கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை 5 மணி முதல் 6 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தோ்தல் நடத்தை விதிமீறல்களை விடியோ பதிவு செய்வதுடன், அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வாக்குச் சாவடி சீட்டு இல்லாதவா்கள் வாக்காளா் அடையாள அட்டை அல்லது ஆதாா் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சல் கணக்குப் புத்தகம், தொழிலாளா் நல அமைச்சகத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீடு அட்டை, ஓட்டுநா் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை(பான் காா்டு), தேசிய மக்கள் பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அடையாள அட்டை, மத்திய, மாநில மற்றும் பொதுத் துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, மக்களவை, மாநிலங்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள் அவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை ஆகியவற்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.