சிறுமியை கட்டாய திருமணம் செய்த வழக்கில் வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
சிறுமியை கட்டாய திருமணம் செய்த வழக்கில் வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது. 5பேர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் கீழராயபுரம் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை அதே கிராமத்தை சேர்ந்த உறவினரான சரவணகுமார் என்பவர் காதலிப்பதாக கூறி உள்ளார். தான் படிக்க வேண்டும் என சிறுமி கூறியதையும் மீறி நான் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி காதலித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறியதையடுத்து தாயார் மற்றும் சிறுமியின் சித்தி சிறுமியை திட்டி உள்ளனர்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி சிறுமியை தனியாக அழைத்து சென்ற சரவணகுமார் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சரவணகுமாரின் தாயார் சூரியகலா சிறுமியின் தாயார் ஜோதிமணியிடம் பேசி திருமணத்திற்கு முடிவு செய்தனர். திருமணம் நடைபெற்ற சில மாதங்களில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சரவண குமாரின் தாயார் சூரியகலா சிறுமியை மீண்டும் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு தனது மகனுக்கு மற்றொரு திருமணம் செய்து கொள்வதாக கூறி விட்டு வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக சரவணகுமாரின் தாயார் சூரியகலா அக்கா மீனா அவரின் மாமா மோகனராஜ் மற்றும் சிறுமியின் தாயார் ஜோதிமணி சித்தி சித்ரா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரின் தாயார் சூரியகலா மற்றும் சிறுமியின் தாயார் ஜோதிமணி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.