பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு திட்டம்: பங்குபெற விவசாயிகளுக்கு அழைப்பு
பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பயிர்காப்பீடு செய்ய வேண்டுமென ஆட்சியர் அறிவித்துள்ளார்
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில்,
வேளாண்மை பயிர்களில் பூச்சி நோய் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் எதிர்பாராத இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து, அவர்களை விவசாயத்தில் நிலைப்பெறச் செய்யவும், திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு 2022-23ம் ஆண்டில் சிறப்பு பருவத்திற்கு அரியலூர் மாவட்டத்தில் 'பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்" என்ற முகமையின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் நெல் II பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், குண்டவெளி, உடையார்பாளையம், தா.பழூர், சுத்தமல்லி, அரியலூர், ஏலாக்குறிச்சி, கீழப்பழூர், மாத்தூர், செந்துறை, நாகமங்கலம், பொன்பரப்பி, ஜெயங்கொண்டம், திருமானூர் ஆகிய 15 பிர்காக்களிலும், மக்காச்சோளம் II பயிருக்கு அரியலூர், ஏலாக்குறிச்சி, கீழப்பழூர், மாத்தூர், செந்துறை, நாகமங்கலம் மற்றும் திருமானூர் ஆகிய 7 பிர்காகளிலும், பருத்தி II பயிருக்கு அரியலூர், ஏலாக்குறிச்சி, கீழப்பழூர், மாத்தூர், செந்துறை, நாகமங்கலம் மற்றும் சுத்தமல்லி ஆகிய 7 பிர்காகளிலும் கீழ்க்கண்டவாறு பயிர் காப்பீடு செய்ய அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நடப்பு 2022-23ம் ஆண்டு சிறப்பு பருவத்தில் நெல் II மற்றும் மக்காச்சோளம் II பயிருக்கு நவம்பர்; 15ம் தேதி வரையிலும் மற்றும் பருத்தி II பயிருக்கு அக்டோபர் 31ம் தேதி வரையிலும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயிகள் 1 ஏக்கர் நெல் II பயிருக்கு ரூ.564-ம், 1 ஏக்கர் மக்காச்சோளம் II பயிருக்கு ரூ.310.5-ம் மற்றும் 1 ஏக்கர் பருத்தி II பயிருக்கு ரூ.572.874-ம் பிரிமீயத் தொகையாக செலுத்தி தங்களது பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.
விவசாயிகள் பொது சேவை மையத்தில் பதிவு செய்யும் போது கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரிமியத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதை பெறலாம். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க சேவை மையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் காப்பீடு செய்யலாம்.
இது தொடர்பான விவரங்களுக்கு, வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.