திருமானூர், தா.பளூரில் நெல்கொள்முதல் நிலையம் : அமைச்சர் ஆலோசனை
திருமானூர் மற்றும் தா.பளூரில் நிரந்த நெல்கொள்முதல் நிலையம் அமைக்க அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தினார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் அரியலூர் மாவட்டத்தில்,நெல்கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கை குறித்தும், சில இடங்களில் தற்காலிக நெல்கொள்முதல் நிலையங்கள் அமைப்பது குறித்தும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்திற்கு அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதிகளில் பயிரிடப்படும் சாகுபடி அளவு, கொள்முதல் செய்யப்படும் இடங்கள் மற்றும் பாதுகாப்பாக வைப்பதற்கான தற்காலிக குடோன்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும் டெல்டா பகுதிகளான திருமானூர் மற்றும் தா.பளூர் பகுதியில் நிரந்தர கொள்முதல் நிலையம் அமைக்கவும், மேலும் இரண்டு ஒன்றியத்திலும் நிரந்த நெல்கொள்முதல் இருப்பு குடோன்கள் கட்ட இடம் தேர்வு செய்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
வரும் சம்பா பருவத்திற்குள் அதிகப்படியான நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவும், மாட்டுவண்டி தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், வெள்ளாறு மற்றும் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க தக்கநடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் உத்திரவிட்டார்.
கூட்டத்தில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, நெல்கொள்முதல் நிலைய அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.