அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கிட அளவீடு முகாம்
அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கிட அளவீடு முகாம் வருகிற 1- ம் தேதி நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ப்ரீடம் டிரஸ்ட் சென்னை நிறுவனத்தின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கிட தகுதியான மாற்றுத்திறனாளிகள் வரவேற்கப்படுகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை வாதம், பக்கவாதம், மூளை முடக்குவாதம், தண்டுவடம் பாதிப்பு, பல்வகை எலும்பு நோய், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு காலிபர், சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், ஊன்றுகோல், நடைபயிற்சி சாதனம், சிறப்பு காலணி ஆகிய உதவி உபகரணங்கள் வழங்கிடும் பொருட்டு 01.12.2021 புதன் கிழமை அன்று அளவீட்டு முகாம் நடை பெறவுள்ளது.
எனவே தகுதியான மாற்றுத்திறனாளிகள் தங்களது மருத்துவ சான்றுடன் கூடிய மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், முகம் மட்டும் தெரிய கூடிய (பாஸ்போட் சைஸ்) புகைப்படம் 2 ஆகிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகள் 01.12.2021 புதன் கிழமை அன்று 09.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கிற்கு நேரில் வருகை புரிந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.