ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
விவசாயிகள் 12வது தவணைத் தொகையை பெற ஆதார் விபரங்களை சரிபார்த்தல் மற்றும் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பது அவசியம்
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் 1,04,055 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில், விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000/- வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6000/- மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 10 தவணைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது 11-வது தவணை தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இனி வருங்காலங்களில் விவசாயிகள் 12-வது தவணைத் தொகையை பெறுவதற்கு தங்களது ஆதார் விபரங்களை சரிபார்த்தல் (e KYC) மற்றும் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பது அவசியம் ஆகும். இது குறித்து கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தங்களது ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து, ஓ.டி.பி மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.
ஆதார் எண்ணுடன், செல்போன் எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகி, பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து, தங்களது விரல் ரேகையை பதிவு செய்து, விபரங்களை சரிபார்த்து கொள்ளலாம். இதற்கான கட்டணமாக ரூ.15/- இ-சேவை மையங்களுக்கு செலுத்த வேண்டும். இந்த இருமுறைகளில் ஏதேனும் ஒரு முறையில் பயனாளிகளான விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை திட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ள தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள், தாங்கள் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்த்து, இணைக்கப்படவில்லை எனில் 12-வது தவணை பெறுவதற்கு முன்னர் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்