திருமானூர் மாரியம்மன் கோயிலில் 55 -வது ஆண்டு பால்குட திருவிழா
திருமானூர் மாரியம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு அன்று பால்குடத்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு பால்குடத்திருவிழா நேற்று நடைபெற்றது. 55-வது ஆண்டாக நடைபெற்ற பால்குடத்திருவிழாவில், பக்தர்கள் கொள்ளிட ஆற்றிலிருந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் பால்குடம், பால்காவடி, அலகுகாவடி, கரும்புத்தொட்டில் உள்ளிட்டவற்றை சுமந்தும், அலகுகுத்தியும் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக கோயிலுக்கு சென்றனர்.
அங்கு, பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. தொடர்ந்து, இரவு நாதஸ்வர இன்னிசை கச்சேரியும், வானவேடிக்கையும் நடைபெற்றது. பின்னர், மலர் மற்றும் மின்னொளி அலங்காரத்துடன் அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.