மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலையில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
திருவண்ணாமலை அருகே நல்லவன்பாளையம், இருளர் குடியிருப்பு பகுதியில் சுமார் 80 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் சாலை வசதியோ, கால்வாய் வசதியோ செய்யப்படாததால் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையினால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி, நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை, கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கக்கோரி திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் சுரேஷ்குமார், காவல் உதவி ஆய்வாளர் சிவசங்கரன் உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அடிப்படை வசதிகள் மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.