லஞ்ச வழக்கில் பெண் தாசில்தார் கைது

ஆரணி தாசில்தார் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-06-15 01:44 GMT

லஞ்ச வழக்கில் ஆரணி பெண் தாசில்தார் கைது ( மாதிரி படம்)

ஆரணி அருகே அரசு சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்குவதற்கு ரூபாய் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த இரவு காவலரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராமச்சந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் ஆரணி அடுத்த அமிர்தி பகுதியில் கேண்டீன் எடுத்து நடத்தி வருகிறார். மேலும் ஊராட்சி பகுதிகளில் அரசு கட்டிட பணிகள் சம்பந்தமாக ஒப்பந்ததாரராக இருந்து டெண்டர் எடுத்து பணிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் கண்ணமங்கலம் பகுதியில் அரசு ஒப்பந்த பணிக்கு டெண்டர் ரூபாய் 20 லட்சத்தில் எடுத்துள்ளார். இதற்காக அரசு சொத்து மதிப்பு சான்று கோரி ஆரணி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாராம். இந்த விண்ணப்பம்மானது துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், விஏஓ மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அரசு சொத்து மதிப்பு சான்று வழங்குவது வழக்கம்.

இந்தச் சான்றை பெறுவதற்காக சீனிவாசன் துணை தாசில்தாருக்கு ரூபாய் 10,000, வருவாய் ஆய்வாளருக்கு ரூபாய் 10,000, விஏஓ விற்கு ரூபாய்  5000  என சீனிவாசன் லஞ்சமாக கொடுத்துள்ளாராம். இந்த லஞ்சத் தொகையை பெற்றுக் கொண்டவர்கள் சான்றுக்கு பரிந்துரை செய்து தாசில்தாருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் சீனிவாசன் நேற்று முன்தினம் தாலுக்கா அலுவலகத்திற்கு சென்று சான்றிதழ் குறித்து கேட்டுள்ளார் அப்போது தாசில்தார் மஞ்சுளா 1 லட்சம் ரூபாய்க்கு 1000 வீதம் 20 லட்சத்திற்கு 20 ஆயிரம் கொடுக்க வேண்டும் , என கறாராக தெரிவித்துள்ளாராம்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பணம் கொடுத்தால் மட்டுமே சான்றுகள் வழங்கப்படும் என்று தாசில்தார் கண்டிப்புடன் தெரிவித்தாராம்.

மேலும் தாசில்தார் மஞ்சுளா இரவு காவலர் பாபு என்பவரை சீனிவாசன் இடம் அனுப்பி பேரம் பேசியுள்ளார். அப்போது ரூபாய் 10 ஆயிரம் கொடுத்தால் தான் தங்களுக்கு சான்று வழங்கப்படும் என்று இரவு காவலர் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஒப்புக்கொண்ட சீனிவாசன் பணத்தை தயார் செய்து விட்டு வருவதாக கூறி அங்கிருந்து சென்றார். ஆனால் பணம் கொடுக்க விரும்பாத சீனிவாசன் இது குறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புதுறை போலீசாரிடம் தெரிவித்து புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூபாய் 10 ஆயிரத்தை நேற்று சீனிவாசலிடம் கொடுத்து அனுப்பினர். சீனிவாசன் ரூபாய் பத்தாயிரத்தை தாசில்தார் மஞ்சுளாவிடம் கொடுத்துள்ளார்.

அந்தத் தொகையைப் பெற்றுக் கொண்ட தாசில்தார் மஞ்சுளா உடனடியாக இரவு காவலர் பாபுவிடம் கொடுக்க முயன்றார் . அப்போது அங்கு மறைந்திருந்த திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வேல்முருகன், இன்ஸ்பெக்டர் மைதிலி ஆகியோர் தலைமையிலான 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தாரையும் இரவு காவலாளி பாபுவையும் கையும் களவுமாக பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் சான்றிதழ் வழங்குவதற்கு மஞ்சுளா இரவு காவலர் பாபு மூலம் பேரம் பேசி ரூபாய் பத்தாயிரம் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது.  இதனை தொடர்ந்து தாசில்தார் மஞ்சுளா இரவு காவலர் பாபு ஆகிய இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த சான்றுகள் வழங்குவதற்கு பணம் வாங்கிய துணை தாசில்தார்,வருவாய் ஆய்வாளர், விஏஓ ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்தால் ஆரணி தாலுகா அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Similar News