மர்மமான முறையில் இறந்த விவசாயி; போலீசார் விசாரணை

ஜமுனாமரதர்தூர் அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-01-12 10:41 GMT

விவசாயி சாவில் மர்மம்; போலீசார் விசாரணை (கோப்பு படம்)

ஜமுனாமரத்தூர் அருகிலுள்ள கீழ்கனவாயூர் கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் ராமதாஸ் (வயது 34), விவசாயி. இவர் அணைக்கட்டு அருகே நிலம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். கடந்த 9-ம் தேதி நிலத்திலிருந்து வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து அவர் புறப்பட்டு வெளியே வந்துள்ளார். ஆனால், அவர் வீட்டிற்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், காலை ஜமுனாமரத்தூர் அருகில் உள்ள வேடகொள்ளைமேடு- அமிர்தி சாலையோரம் ராமதாஸ் சடலம் கிடந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜமுனாமரத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ராமதாஸின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது ராமதாஸின் முகத்தில் லேசான காயமும், கழுத்தில் கயிறு இறுக்கியது போன்ற காயம் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் ராமதாஸின் உடலை மீட்டு, பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, ஜமுனாமரத்தூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News