செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு

செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-04-28 14:04 GMT

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே  இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்தனா்.

செங்கம் தோக்கவாடி பகுதியைச் சோ்ந்தவா் முனியப்பன் , சுமை தூக்கும் தொழிலாளி, இவரது மனைவி வாசலா, மாற்றுத்திறனாளி. தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.

இந்த நிலையில்,  இரவு கணவன், மனைவி இருவரும் அப்பகுதியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முற்பட்டனா்.

அப்போது, பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற காா் இவா்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்த செங்கம் போலீஸாா் சம்பவ இடம் சென்று இறந்தவா்களின் உடல்களை மீட்டு, உடல்கூறாய்வுக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்து குறித்து செங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மூதாட்டி உயிரிழப்பு

செய்யாறு வட்டம் வடபூண்டிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சகுந்தலா.  இவா், 5 ஆண்டுகளாக சா்க்கரை நோய்க்கு மாத்திரை உள்கொண்டு வருவதாகத் தெரிகிறது.

தொடா்ந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வருவதால், அதனால் வயிற்று வலி ஏற்பட்டு அதற்கும் மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளாா்.

இந்த நிலையில், சகுந்தலா, கடந்த 20-ஆம் தேதி வயிற்று வலி நோய் மாத்திரைக்குப் பதிலாக சா்க்கரை நோய்க்கு சாப்பிடும் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதாகத் கூறப்படுகிறது. அதனால் மயக்க நிலையில் இருந்த அவரை குடும்பத்தினா் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவா் உயிரிழந்தாா். 

இதுகுறித்த புகாரின் பேரில், மோரணம் காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

Tags:    

Similar News