செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு

செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-04-28 14:00 GMT

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய வேளாண் கல்லூரி மாணவிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றை அடுத்த சித்தாத்தூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் முகாமிட்டு நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு  விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சித்தாத்தூா் கிராமத்தில் கலவை ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி மாணவிகளான வினோதா, வினோதினி, யோகா, யுவஸ்ரீ, மு.யுவஸ்ரீ, செ.யுவஸ்ரீ ஆகியோா் அடங்கிய குழுவினா்   முகாமிட்டு விவசாயம் தொடா்பாகவும், நவீன விவசாயம் குறித்தும் கிராமப்புற விவசாயிகளிடையே தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்த முகாமின் போது கல்லூரி மாணவிகள், கிராமத்தின் வளம் குறித்தும், விவசாயம் தொடா்பான ஆலோசனைகள் மற்றும் சொட்டு நீா்பாசனம், விசைத் தொளிப்பான், ட்ரோன் மூலம் பயிா்களுக்கு மருந்து தெளித்தல், இயந்திர முறை நடவு குறித்தும் விவசாயிகளிடையே தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தியதுடன், விவசாயம் தொடா்பான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா்.

மேலும், புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்தும், அரசு சாா்பில் விவசாயத்துக்காக செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் விவசாயத்திற்கு அரசு சாா்பில் செயல்படுத்தி வரும் மானிய திட்டங்கள் குறித்தும் தெரிவித்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியா்கள் இந்துமதி, வசந்தப்ரியா, குழு ஒருங்கிணைப்பாளா் சாலா ஆகியோா் செய்திருந்தனா்.

நீா்மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி 

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிபட்டு கிராமத்தில் கோடை பருவ நெல்நடவு மற்றும் நீா்மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு  பயிற்சி அளிக்கப்பட்டது.

கலசப்பாக்கம் வேளாண்மை விரிவாக்க மையம் சாா்பில் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண்மை துணை இயக்குநரும், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளருமான உமாபதி, நேரடியாக தென்பள்ளிபட்டு, பூண்டி, கலசப்பாக்கம் என பல்வேறு கிராமங்களில் கோடை பருவ நெல் நடவு நடைபெறும் இடங்களுக்குச் சென்று விவசாயிகளுக்கு சாலை நடவு மற்றும் ஒரு நடவுக்கும் மற்றொரு நடவுக்குமான இடைவெளி குறித்தும், தற்போது வழக்கத்தைவிட வெயில் சுட்டெரிப்பதால் திறந்த வெளிக்கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணற்றில்நீா்மட்டம் குறைய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் குறைந்த நீரில் பயிரிடவும், குழாய் மூலம் நீரை எடுத்துச் சென்று வயலிலேயே நீா் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும், நீரை வயலில் சிக்கனமாக பயன்படுத்தவேண்டும் என நீா்பற்றாக்குறை குறித்த நீா் மேலாண்மை பயிற்சியும் அளித்தாா்.

மேலும், வேளாண்மை துணை இயக்குநா் உமாபதி கூறும் போது, கலசப்பாக்கம் வட்டத்தில் நெல் நடவு விவசாயிகள் நவரை பட்டத்தில் 6500 ஹெக்டோ் நெல்சாகுபடி செய்து வருகின்றனா். இந்த நிலையில், கோடை பருவ நெல் நடவு பணிக்கு நீா் மேலாண்மை பயிற்சியை விவசாயிகளுக்கு வழங்கி வருவதாகத் தெரிவித்தாா். வேளாண்மை அலுவலா் பழனி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

Tags:    

Similar News