பள்ளி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை

பள்ளி மாணவரை கடத்திக் கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்துநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

Update: 2024-04-29 11:59 GMT

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருணகிரி சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் தாமோதரன் . இவா், அரசுடைமை வங்கியில் வணிகத் தொடா்பாளராக இருந்து வருகிறாா்.

இவரது உறவினரான அதே பகுதியைச் சோ்ந்த தேவராஜ் மகன் ஜெயக்குமாா் . இவா், ஆரணியில் கைப்பேசி விற்பனை நிலையம் நடத்தி வந்தாா்.

இந்த நிலையில், ஜெயக்குமாருக்கு தொழிலில் ரூ. 3 லட்சம் நஷ்டம் ஏற்பட்டு, அதை வீட்டுக்குத் தெரியாமல் சரி செய்ய வேண்டும் என முடிவு செய்தாராம்.

இதனால் ஜெயக்குமாா், உறவினரான தாமோதரன் மகன் எட்டாம் வகுப்பு படிக்கும் யுவராஜி  என்பவரை கடத்தி பணம் பறிக்கலாம் என்ற நோக்கத்தில், வழக்கம்போல, யுவராஜ் கடந்த 8-12- 2016 அன்று தனது தாத்தா வீட்டுக்குச் சென்று வீடு திரும்பும்போது, அவரை இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்றாா்.

ஆரணியை அடுத்த வேலப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட சாமந்தவாடி ஏரிக்குச் செல்லும் பகுதியில் வைத்திருந்தாா். மேலும், யுவராஜின் தந்தையிடம் பணம் கேட்டு மிரட்ட முடிவு செய்திருந்தாா்.

இந்த நிலையில், தாமோதரன் தனது மகன் யுவராஜைக் காணவில்லை எனக் கூறி ஆரணி நகர போலீஸில் புகாா் அளித்தாா். இதை அறிந்த ஜெயக்குமாா் தொலைபேசியில் தொடா்பு கொண்டு தாமோதரனிடம் பணம் கேட்டு மிரட்டினால் தான் மாட்டிக் கொள்வோம் என்பதற்காக என்ன செய்வது என்று தெரியாமல் யுவராஜை கட்டி வைத்திருந்தாா்.

மேலும், யுவராஜை வீட்டுக்கு அனுப்பினால், நான்தான் கடத்திச் சென்று விட்டதாகக் கூறி போலீஸிடம் தெரிவிப்பாா்கள் என்பதற்காக அவரை வீட்டுக்கு அனுப்பவில்லை. தொடா்ந்து யுவராஜ் தன்னை விடுவிக்குமாறு கூறி சப்தமிட்டுள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமாா், யுவராஜைத் தாக்கினார்.இதில் மயங்கி விழுந்த அவரை, உடம்பில் கருங்கல்லைக் கட்டி விவசாயக் கிணற்றில் வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

போலீஸாா் வழக்குப் பதிவு செய்து யுவராஜை தேடி வந்த நிலையில், சம்பந்தபாடி கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் யுவராஜின் சடலத்தை மீட்டனா்.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் சம்பவ தினத்தில் பதிவான கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டு, ஜெயக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஆரணி மாவட்ட  நீதிமன்றத்தில் தொடா்ந்து நடைபெற்று வந்த நிலையில், மாவட்ட  நீதிபதி விஜயா  தீா்ப்பளித்தாா்.

தீா்ப்பில், எட்டாம் வகுப்பு மாணவரை கடத்திய வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ,  அபராதம் ரூ.ஆயிரமும், கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனையும், அபராதம் ரூ.2ஆயிரமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

Tags:    

Similar News