வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை பார்வையிட வசதி

வாக்கு எண்ணும் மையங்களில், கண்காணிப்பு கேமரா காட்சிகளை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-04-30 11:17 GMT

வாக்கு எண்ணும் மையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள்.

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில், கண்காணிப்பு கேமரா காட்சிகளை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 12 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சுமாா் 13 ஆயிரம் அரசுப் பள்ளி ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள் வாக்குச்சாவடி பணி மற்றும் தோ்தல் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில், கண்காணிப்பு கேமரா காட்சிகளை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டியில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும், சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 35 நாட்கள் உள்ளன. அதையொட்டி, இரண்டு தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அறைகளில் வைத்து 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

மேலும், நீலகிரி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள் திரையிடப்படுவதில் சிக்கல் ஏற்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு அனுமதியளிக்கவும், அதற்கான வசதிகளை ஏற்படுத்தித்திடவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News