திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி

கல்வி என்பது மதிப்பெண் எடுப்பது மட்டுமல்ல என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் அறிவுரை வழங்கினார்.

Update: 2024-04-28 13:33 GMT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில்     ‘என் கல்லூரிக்கனவு”  என்ற மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன்  தலைமையில் நடைபெற்றது.

கருத்தரங்கில் , மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி அவா் பேசியதாவது:-

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் என் கல்லூரி கனவு என்னும் பெயரில் மாணவர்கள் கனவில் வழிகாட்டல் கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்குபெற்றது மகிழ்ச்சியளிக்கின்றது.

கல்வி என்பது மதிப்பெண் எடுப்பது மட்டுமல்ல. கல்வியைப் பயன்படுத்தி நம் வாழ்க்கையில் பல்வேறு வளா்ச்சிகளைப் பெற வேண்டும். கல்வி என்பது சிந்திப்பது, கற்றுத் தருவது ஆகும்.  உலகத்திற்கே எழுத்தறிவித்த சமூகம் நமது தமிழ் சமுதாயமாகும்.

கடினமான சூழ்நிலைகள் மூலம்தான் நம் திறமைகள் வெளிவரும். நெருக்கடியான சூழ்நிலைகளைக் கையாள நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். வாய்ப்புகள் எப்போது வேண்டுமானாலும் நமக்கு கைகூடி வரும்.

தோ்வில் தோல்வியடைந்தால் கவலைப்பட வேண்டாம். அடுத்த ஆண்டு தோ்வு எழுதி தோ்ச்சி பெறலாம். மற்றவா்கள் எல்லாம் ஏளனமாகப் பேசுவாா்கள் என்று நினைக்க வேண்டாம். வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது . 

திருக்குறளை மிஞ்சிய நூல் இந்த உலகத்தில் எங்கும் இல்லை. உலகத்தில் உள்ள அனைத்து சமூகத்திற்கும் தேவையான வாழ்க்கை முறை கருத்துக்கள் அதில் இருக்கிறது. கல்வியே ஒருவருக்கு சிறந்த செல்வமாகும். வாழ்க்கை வேறு கல்வி என்பது வேறு. கல்வி என்பது சிந்திப்பது கற்றுத் தருவதாகும். கல்வி பற்றிய நமது எண்ணங்களை மாற்ற வேண்டும். நமது எண்ணத்தை பொருத்தே நமக்கு மதிப்பு கிடைக்கும். எந்த தொழில் செய்தாலும் அதில் நமது திறமையை வெளிப்படுத்த வேண்டும் மருத்துவம் மட்டுமே கல்வி என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். 

பெற்றோர்களை நினைத்துப் பாருங்கள் அவர்களை நீங்கள் சங்கடத்தில் ஆழ்த்தக்கூடாது. அவர்கள் உங்களை நினைத்து வாழ்நாள் முழுவதும் கண்ணீர் சிந்தும் சூழ்நிலை உருவாக்கக் கூடாது. எப்பொழுது வேண்டுமானாலும் வாழ்வில் மாற்றங்கள் நிகழும். பல்வேறு தொழிற்சாலைகளில் நமக்கான வாய்ப்புகள் இருக்கிறது.

கடினமான முயற்சிகள் மூலம் தான் சாதனைகள் புரிய முடியும். இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியை பயன்படுத்தி உங்கள் வாழ்வை மேம்படுத்தி கொள்ள வேண்டும். 

இவ்வாவறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.

கருத்தரங்கில் திருவண்ணாமலை, கலசப்பாக்கம், செங்கம், போளூா், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த சுமாா் 1,200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.

இதில், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் சாந்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேஷ்மூா்த்தி, தாட்கோ மேலாளா் ஏழுமலை, சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கணபதி, மண்டல ஒருங்கிணைப்பாளா் ரவி, மாவட்ட பழங்குடியினா் நல அலுவலா் கலைச்செல்வி மற்றும் அரசு அலுவலா்கள், பெற்றோா்கள், காப்பாளா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News