பருவத மலையில் கிரிவலம் வந்த பக்தர்கள்

கலசப்பாக்கம் அருகே பருவத மலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

Update: 2024-04-24 03:14 GMT

பருவதமலை உச்சிக்கு சென்ற பக்தர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே கலசப்பாக்கம் தாலுக்கா தென் மகாதேவ மங்கலத்தில் பிரசித்தி பெற்ற பருவதமலை அமைந்துள்ளது.

இந்த மலையின் உச்சியில் ஸ்ரீ பிரம்மராம்பிகை சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது . இந்த கோயிலுக்கு பல மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பௌர்ணமி க்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பருவதமலைக்கு வருகை தந்தனர்.


                   பருவதமலை அடிவாரத்தில் கிரிவலம் வந்த பக்தர்கள்

அதனைத் தொடர்ந்து கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் மலை ஏறத் தொடங்கினர். இரவு நேரம் ஆனதும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது .அரோகரா தோஷத்துடன் பருவதமலை உச்சிக்கு சென்று சாமி தரிசனம் செய்து பருவத மலையை விட்டு கீழ இறங்கி வந்தனர். பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே அன்னதானம் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

பருவத மலையின் கிரிவல சிறப்புகள்

முழு நிலவு ஒளி வீசும் பௌர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

பௌர்ணமி கிரிவலம் சித்தர்களால் சிறப்பாக போற்றப்படுகிறது. சிவபெருமான் நந்தியாகவும், லிங்கமாகவும், திரிசூலமாகவும் மாறி மாறி காட்சியளிக்கும் பருவத மலையில் சித்தர்களும், ரிஷிகளும் ,முனிவர்களும், சூட்சம வடிவில் கிரிவலம் வருகின்றனர் என்ற நம்பிக்கை பக்தர்கள் இடத்தில் உள்ளது.

பக்தர்களுக்கு வழிகாட்டும் பைரவர்

4560 அடி உயரமுள்ள பர்வதமலை ஏறி செல்லும் பக்தர்கள் படிக்கட்டுகள், பாறைகள், செங்குத்தான கடப்பாரை படி , ஆகாய படி , ஏணி படி என பல்வேறு படிகளை கடந்து மலை ஏறிச் சென்று தரிசனம் செய்ய வேண்டும். மலையேறி செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக சிவனின் 64 அவதாரங்களில் ஒன்றான பைரவர் பக்தர்களுக்கு வழிகாட்டி வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று சித்ரா பௌர்ணமி தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை மீது செல்லும் போதும் பாதி மண்டபம் அருகே பைரவர் பக்தர்களுக்கு வழிகாட்டி காட்சி தந்தார்.

இக்காட்சியை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்து வணங்கி மலையேறிச் சென்றனர்.


மருத்துவ குழுவினர்

பருவதமலை உச்சிக்கு செல்லும் பக்தர்கள் நலன் கருதி மலையடி வாரத்திலும் ,பர்வத மலையின் உச்சியில் உள்ள கோயில் வளாகத்திலும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக இந்து சமய அறநிலைத்துறை சார்பிலும் பக்தர்கள் சார்பிலும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

ஆனால் இன்னுமும் அந்த கோரிக்கை நிறைவேற்றாத நிலையில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மருத்துவ குழுவினர் மலையின் பாதி தொலைவு வரை சென்று பக்தர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

குடிநீர்

மலையேறும் பக்தர்களை மலை அடிவாரத்தில் காவல்துறை, வனத்துறை, இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து மலையேற அனுமதித்தனர். மேலும் மலை அடிவாரத்தில் இருந்து பாதி மண்டபம் வரை குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் மலையேறி சென்றனர்.

Similar News