பொங்கல் விழாவின்போது கோவில்கள் நடை அடைப்பு: சாமி தரிசனமின்றி பக்தர்கள் ஏமாற்றம்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொங்கல் விழாவின்போது கோயில்கள் நடை அடைக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Update: 2022-01-14 12:30 GMT

கொரோனா ஊரடங்கால் நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில் 5 நாட்கள் நடை அடைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு இன்று 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை 5 நாட்கள் அனைத்து கோயில்கள், சர்ச்சுகள் மற்றும் மசூதிகளை மூடி வைக்க உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பலரும் புத்தாடைகள் அணிந்து குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த ஆண்டு கோயில் நடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் நாமக்கல்லில் உள்ள பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோயிலுக்கு வருகை தந்த தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். பல பக்தர்கள் கோயிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிச் சென்றனர்.

தொடர்ந்து 5 நாட்கள் கோயில் நடை அடைப்பால் நாமக்கல்லில் உள்ள நாமகிரி தாயார் கோயில், பலப்பட்டறை மாரியம்மன் கோயில், மோகனூர் காந்தமலை பலதாண்டாயுதபாணி கோயில், அசலதீபேஸ்வரர் கோயில், மோகனூர் மற்றும் பொத்தனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில், ப.வேலூர் காசி விஸ்வநாதர் கோவில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில், கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோயில், சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள, அனைத்து முக்கிய கோயில்களிலும் நடை அடைக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தைப்பூசம்:

வருகிற 18ம் தேதி செவ்வாய்க்கிழமை தைப்பூச விழா நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூலிப்பட்டி முருகன் கோயில், மோகனூர் காந்தமாலை பாலதண்டாயுபாணி கோயில், கபிலர்மலை முருகன் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் ஆண்டுதோறும் தைப்பூசத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகளை வழிபடுவார்கள்.

இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இல்லாமல் வழக்கமான பூஜைகள மற்றும் நடத்த இந்த சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி கோயில்களின் அருகில் தற்காலிக தேர்க்கடைகள் அமைக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் முருக பக்தர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News