ஸ்ரீ கண்ணனூர் புது மாரியம்மன் திருவிழா; பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி நேர்த்திக்கடன்
Namakkal news- ப.வேலூர் பேட்டை ஸ்ரீ கண்ணனூர் புது மாரியம்மன் சித்திரைத் திருவிழாவில் பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
Namakkal news, Namakkal news today-நாமக்கல், ப.வேலூர் பேட்டை ஸ்ரீ கண்ணனூர் புது மாரியம்மன் சித்திரைத் திருவிழாவில் பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
பரமத்தி வேலூர் பேட்டை ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதல், பூச்சாற்றுதல் கம்பம் நடுதல் ஆகியவற்றோடு தொடங்கியது. நாள்தோறும், உற்சவர் அம்மன் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை வடிசோறு படைத்து பூஜை நடைபெற்றது. முன்னதாக மூலவர் மாரியம்மனுக்கு 28 வகை மூலிகைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது, அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதானை நடைபெற்றது.
உற்சவர் அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வேலூர் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சாமி திருவீதி உலா கிளம்பியதும், கோயில் வளாகத்தில் திரளான பக்தர்கள் கைகளில் அக்னி சட்டியை ஏந்தியவாறு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று கோயிலை வந்தடைந்தனர். இந்நிகழ்வில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இன்று காலை கோயில் வளாகத்தில் தீக்குண்டம் அமைக்கப்பட்டது. பின்னர் காவிரி ஆற்றிற்கு சென்ற பக்தர்கள் புனித நீராடி ஊர்வலமாக வந்து தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து அம்மனை வழிபட்டனர். திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.