திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!

திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2024-04-29 11:00 GMT

திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை, மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் :

கடும் வெப்பத்தால், திருச்செங்கோடு நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் உமா, விபத்து நடைபெற்ற பகுதியைப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதகாலமாக வெயில் கடுமையாக உள்ளது. பகல் நேர வெப்நிலை 107 டிகிரிக்கும் அதிகமாக உள்ளது. இதனால் கொல்லிமலை வனப்பகுதியில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுகின்றன. மாவட்டத்தில் பல இடங்களில் ரோடு ஓரம் உள்ள காய்ந்த செடிகள், சருகுககள் மற்றும் குப்பை கூளங்களில் தீப்பிடித்து எரிந்து வருகிறது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை, நுண் உரமாக்கும் கம்போஸ்ட் உரக்கிடங்கு, வார்டு எண். 5 கோழிக்கால் நத்தம் அருகே உள்ள செங்கோடம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று பகல் நேரத்தில் கடும் வெப்பம் நிலவியதால், திருச்செங்கோடு நகராட்சி குப்பைக் கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பெரும் புகை மூட்டம் உருவானது. தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள், குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைத்துக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.


இது குறித்து தகவல் கிடைத்ததும், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அவர் நகராட்சி நுண் உரம் தயாரிப்பு மையம் மற்றும் குப்பைக் கிடங்கை பார்வையிட்டார். மேலும், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். குப்பை கிடங்கிற்கு அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கு உடனடியாக அடிப்படை சிகிச்சை வழங்கவும், குப்பை கிடங்கிற்கு அருகில் உள்ள நெருக்கமான குடியிருப்பு பகுதிகளில், நடமாடும் மருத்துவ முகாமினை அமைத்து சிகிச்சை வழங்கவும் அவர் டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து முறையான அறிக்கை சமர்ப்பிக்கவும், குப்பை கிடங்கை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திடவும் நகராட்சி கமிஷனருக்கு அவர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது திருச்செங்கோடு நகராட்சித் தலைவர் நளினி சுரேஷ்பாபு, நகராட்சி கமிஷனர் சேகர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News