நாமக்கல்லில் மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

நாமக்கல்லில் நடைபெற்ற, இலவச மருத்துவ முகாமில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன் பெற்றனர்.

Update: 2023-01-31 11:30 GMT

நாமக்கல்லில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கான சிகிச்சை முகாம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரியின் உத்தரவின்படி, மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், வட்டார வள மையத்துக்கு உட்பட்ட பிறந்த குழந்தை முதல், 18 வயது வரை உள்ள, மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு, 2022–23ம் கல்வியாண்டுக்கான இலவச மருத்துவ முகாம், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாஸ்கர் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் மாதவன், சந்திரவதனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில், மாணவர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்குதல், அடையாள அட்டை புதுப்பித்தல், அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தல், மாணவர்களுக்கு தேவையான உதவி உபகரணங்கள் அளவீடு செய்தல், மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்கான, முதல்வரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்துக்கு பதிவு செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது. முகாமில், நாமக்கல் ஒன்றியத்துக்கு உட்பட்ட, 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் , சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை பயிற்சியாளர்கள், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News