அழகு முத்து மாரியம்மன் கோயிலில் 6 ஆண்டுகளுக்குப்பின் திருவிழா

அழகு முத்து மாரியம்மன் கோயில் திருவிழா 6 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக துவங்கியது.

Update: 2022-05-21 09:45 GMT

நாமக்கல், கணபதி நகர் அழகு முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, நடைபெற்ற தீர்த்துக்குட ஊர்வலத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.

நாமக்கல் நகராட்சி, கணபதி நகரில், அழகு முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு விநாயகர், கருப்பண்ணசாமி, நாகதேவி கோயில்கள் உள்ளன. இக்கோயிலில், ஆண்டு தோறும் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடுப்படுவது வழக்கம். 6 ஆண்டுக்குப் பின், இந்த ஆண்டு, கோயில் திருவிழா நடத்த பொதுமக்கள் முடிவு செய்தனர்.

இதையொட்டி, கடந்த 9ம் தேதி, காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கடந்த, 16ம் தேதி, அம்மனுக்கு மறுகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்தனர். மாலை, 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

நாளை 22ம் தேதி, காலை 7 மணிக்கு, பால் குடம் ஊர்வலம், பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். பக்தர்கள், அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். மாலை 4 மணிக்கு, கரகாட்டத்துடன், மாவிளக்கு பூஜை, வான வேடிக்கை நடைபெறுகிறது. 23ம் தேதி காலை 7 மணிக்கு, பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழா, 6 மணிக்கு கம்பம் பிடுங்கி கிணற்றில் விடும் நிகழ்ச்சியும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News