பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் பணியாற்றிய 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

Update: 2022-03-02 07:45 GMT

நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த ஆய்வு, தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் தலைமையில் நடைபெற்றது. ஆய்வின் போது பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் இயங்கி வந்த பைக் பட்டறையில் 2 சிறுவர்களும், மளிகைக்கடையில் 2 சிறுவர்களும், வெல்டிங் பட்டறையில் ஒரு சிறுவனும் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட 5 குழந்தை தொழிலாளர்கள், மாவட்ட கலெக்டர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். கலெக்டர் உத்தரவின்பேரில் அவர்கள் குழந்தைகள் நலக்குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டு, கல்வி கற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கலெக்டர் கூறுகையில், 18 வயதிற்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரூ.20 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை அபராதம் மற்றும் 6 மாதம் முதல் 2 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியாற்றுவது கண்டறியப்பட்டால் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலக எண் 04286 280056, திட்ட இயக்குநர் செல்போன் எண் 98421 96122 மற்றும் சைல்டு லைன் 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

குழந்தை தொழிலாளர் ஆய்வில், சங்ககிரி தொழிலாளர் துணை ஆய்வாளர் கோமதி, திருச்செங்கோடு உதவி ஆய்வாளர் மோகன், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் அந்தோணி ஜெனிட், சைல்டு லைன் (1098) களப்பணியாளர் பெலிக்ஸ் அருள் ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News