பிசி, எம்பிசி கல்வி உதவித்தொகை: ஆண்டு வருமான உச்சவரம்பு நீட்டிப்பு

பி.சி, எம்பிசி பிரிவினர் ஸ்காலர்ஷிப் பெற பெற்றோர்களின் ஆண்டு வருமான உச்சவரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-08 10:00 GMT

பைல் படம்.

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

2021-2022ம் ஆண்டு முதல் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் சார்பில் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. இதற்கான பெற்றோர்களின் ஆண்டு வருமான உச்ச வரம்பு ஆண்டிற்கு ரூ.2 லட்சத்தில் இருந்து, ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும், மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேலும் 2021-22ம் ஆண்டிற்கான முதுகலை (எம்.ஏ., எம்.காம், எம்.எஸ்ஸி, எம்.பில்., எம்.பி.ஏ., பிஎச்.டி.,) பாலிடெக்னிக் ( 3 ஆண்டு டிப்ளமோ படிப்பு) , தொழிற்படிப்பு (மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., கால்நடை மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், போன்ற மருத்துவ பிரிவுகளுக்கும், வேளாண்மை, இன்ஜினியரிங் பொறியியல், சட்டம்,) போன்ற படிப்புகளில் படிக்கும், பிசி, எம்பிசி மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2. 50 லட்சமாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கக, இமெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண் 044-29515942 மூலம் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News