நாமக்கல்லில் ஆடு வளர்ப்பு குறித்து 3 நாட்கள் இலவச பயிற்சி
நாமக்கல்லில் வருகிற 15ம் தேதி முதல் 3 நாட்கள் வெள்ளாடு வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள, வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பாரமரிப்பு, பால்வளத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் லாபகரமான வெள்ளாடு வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. வருகிற 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை 3 நாட்கள் இப்பயிற்சி நடைபெறும்.
இப்பயிற்சியில் வெள்ளாடு வளர்ப்பின் முக்கியத்துவம், வெள்ளாட்டு இனங்கள் மற்றும் அவற்றை தேர்வு செய்யும் முறைகள், கொட்டகை அமைக்கும் முறைகள், சரிவிகித தீவனமளித்தல், பசுந்தீவனம், உலர் தீவனம் மற்றும் கலப்புத் தீவனம் தயாரிக்கும் முறைகள், தீவன மேலாண்மை, இனப்பெருக்க மேலாண்மை, நல மேலாண்மை மற்றும் நோய் தடுப்பு மேலாண்மை, நோய் தாக்கம் ஏற்படும் கால அட்டவணைக்கேற்ப தடுப்பூசி அளிக்கும் முறைகள் குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்படும்.
இப்பயிற்சியில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள், வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ பெயரை முன்பதிவு செய்து கலந்துகொள்ளலாம் என்று அறிவியல் நிலைய தலைவர் டாக்டர் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.